Monday, March 29, 2010

இந்த பஸ் எந்த ஊருக்கு போகும் ?

பஸ் டிரைவர்...அரசு விரைவுப் பேருந்து, மாநகரப் பேருந்து, சுற்றுலா பேருந்து, கல்லூரி பேருந்து அப்படின்னு சொல்லிட்டே போகலாம்.
ஓவ்வொருத்தருக்கும் இந்த பஸ் டிரைவர் பத்தி மனசுக்குள் ஒரு உருவகம் இருக்கும். நாம் நம் வாழ்வில் சந்தித்த ஏதோ ஒரு டிரைவர் நம் மனதிற்கு வருவார்.

பொதுவாக டிரைவர்கள் என்றால் கருத்த உதடுகள் ( புகைப்புடிப்பதினால் உதடுகளுக்கு கிடைத்த நிறம் ), ஒரு புகையிலை வாசனை, மயிற் மெதுவாக கொட்ட ஆரம்பித்து வழுக்கை விழும், அடிக்கடி டீ சாப்பிட சொல்ல நினைக்கும் மனது என்று பெரும்பாலும் இப்படி தான் இவர்கள் மனதில் வலம் வருவார்கள்,இவர்கள் விதிவிளக்கு இருக்கவே செய்கிறார்கள்.

நானும் ஒருவருடனும் பழக்கமானேன். அவர் ஒரு கல்லூரி பேருந்தின் டிரைவர்.
அந்த அண்ணன என்னுடன் வேலை செய்த எல்லோருடனும் நன்றாக பழகுவார். நாங்கள் கணிப்பொறி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன் கொஞ்ச நாள். அவர் அங்கு கணிப்பொறி கற்றுக்கொள்ள வந்தார்.

கற்றுக் கொள்ள வந்தவர் எங்களிடம் வகுப்பு நேரம்போக எங்களிடம் பல கதைகள் சொல்வார்.
கதைகள் எல்லாம் யாரோ ஒருவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சொல்வார் ஆனால் யாருடைய பெயரையும் சொல்ல மாட்டார். கதைகள் கொஞ்ச "கில்மா" கதைகளாக இருக்கும்.

டிரைவர் வாழ்க்கையில் இருக்கும் அந்த சங்கடங்கள், சுவாரஸ்யங்கள் என அனைத்தும் சொல்வார்.

அவர் ஏதோ ஒரு கல்லூரிப் பேருந்து ஓட்டிக் கொண்டிருந்தார். அந்த கல்லூரிக்கு பல பேருந்துகள் உண்டு.
ஊருக்கு வெளியே இருந்த அந்த கல்லூரிக்கு போகும் போது , ஒவ்வொரு பேருந்துக்கும் இடையில் ஒரு போட்டி நிலவும். ஆனால் இந்த போட்டி illegal racing
எப்போது ஆரம்பிக்கும் என்றால் City Limit தாண்டிய பின் தான். இங்க வயது வித்தியாசம் என்ற பேதம் கிடையாது.
போட்டிகளில் வயதான இளைஞர்கள் கூட முதலில் இலக்கை அடைந்து விட்டுவிட்டு " சு*!@$#%  ... யார்க்கிட்ட ,,,, போடா உன் வயசு என் அனுபவம்டா  ", அப்படின்னு சொல்லிட்டு கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளாமல் போவார்களாம்.

வழிவிட்டு அமைதியாக செல்பவர்களும் உண்டு.

இப்படி நாம் இவர்களை யோசிக்கும் போது அழகாக தெரியும் இவர்களையே

இந்த பஸ்ஸை தவிர வேறு வாகனங்களில் நம்மில் பலர் பயணம் செய்தால் அந்த வாகன ஓட்டுனரின் பார்வையில் இந்த பஸ் டிரைவர் கண் முன் தெரியாமல் ஓட்டுபவர் போல தெரிகிறார் பெரும்பாலான சமயங்களில்.
அந்த வாகன ஓட்டுனர் பஸ் டிரைவரை எப்படியாவது ஓரிரு வார்த்தைகள் திட்டுவார்.

இந்த வாகன ஓட்டுனர் மட்டுமல்ல , சாலையோரங்களில் நடந்து செல்லும் எந்தவொரு சாமனிய மனிதனும் இந்த பஸ் டிரைவர்களை பழிக்கத்தான் செய்கிறார்கள்.

சரி ... இப்ப இந்த டிரைவர்கள் இவர்கள் நம்மில் பலர் நினைப்பது போல் அகங்காரத்துடன் பேருந்து ஓட்டுகிறார்களா ?

இவர்கள் இயக்கும் இந்த வண்டியின் அளவு இவர்களுக்கு இந்த பிம்பத்தை தருகிறதா என்றால் ? ம்ம்ம்ம் இருக்கலாம்....

அந்த டிரைவர் அண்ணே என்கிட்ட சொல்லும் போது அவர்களில் சிலர் வண்டியினை வேகமாக செலுத்துவே செய்கிறார்கள் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் அவர்கள் வெறிபிடித்து ஓட்டுவதில்லை என்று சொன்னார். They are not Maniac.
ஆனால் அவருக்குள் ஒரு கனவு, ஒரு ஆசை என்னவென்றால் அவருக்கு இந்த பஸ்ஸை ஓட்டும் பணியிலிருந்து வேறு நல்ல மேஜை பணிக்கு செல்ல விரும்பினார். அவர் அத்தனை வருடம் பேருந்து ஓட்டிய காலம் சிறு விபத்துகளை சந்தித்திருக்கிறார்.
தன்மேல் தவறில்லை என்றாலும் சிலரை இரண்டு மணிக்கு ஒருவரை ஒரு மருத்துவமனையில் செர்த்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
சில நேரம்  அந்த மனிதனின் வலி, இரத்தம், அந்த பாவம் தன்னையோ தன் குடும்பத்தையோ பாதிக்குமோ என்ற பயத்தில் தான் அந்த வேலையை விட்டு செல்ல நினைக்கிறேன் என்பார்.
ஒரு மனிதனின் மனமே அவனுக்கு எதிராக செயல்படுமாயின் அது உளவியல் ரீதியாக சிந்திக்கப் பட வேண்டிய ஒன்றே.
அவர் தன் வாழ்வில் நடக்கும் எந்த அசம்பாவித தற்செயலாயினும் அது என்றோ தான் ஏதாவது உயிரில் வலி ஏற்படுத்தியதன் காரணமாக இருக்குமோ என்று அவர்களது மனம் கேள்வி கேட்டு சித்தரவதை செய்யும்..

இந்த மனச்சூழல் சாதாரணமாக யாருக்கும் வரக்கூடியதே. ஆனால் இவர்கள் உயிர்களோடு சம்பந்தப்படுவதால் விளைவுகளும் உயிர்களோடு சம்பந்தப்படுமோ என்ற பயம் தொனிக்கும்.

இங்கே எத்தனை பேர் The Machinist என்ற திரைப்படத்தை பார்த்திரிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.Brad Anderson நெறியாள Christian Bale நடிப்பில் வெளிவந்த படம் இது. இந்த படம் இடித்துவிட்டு ஒடும் டிரைவர்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை அழகாக படம்பிடித்து காட்டியிருப்பார்கள்.

சேரி இதுல நாம என்ன பண்ண முடியும் ? அப்படின்னா...நாம ஒவ்வொருத்தருகிட்டையும் போயும் உங்களுக்கு அந்த பிரச்சனையா ?  இல்ல இந்த பிரச்சனையா ? கேட்க வேண்டாம்.

கெட்டத நல்லதால அறுப்போம்.
இந்த டிரைவர்கிட்ட பயணம் முடிஞ்சு "தேங்க்ஸ்.. நல்லா ஓட்டினிங்க " அப்படின்னு ஒரு பிரயாணி சொன்னார். பெருமையா இருந்தது.
இது என்னோட தீர்வு இல்ல அந்த பிரையாணியோடது. 

சார் இந்த பஸ் எந்த ஊர்க்கு போகும் கேக்குற நாம பயணம் முடிஞ்சு ஏன் ஒரு நன்றி சொல்ல கூடாதுன்னு தோணுச்சு

இந்த இடுகைய படிக்கிற எந்த ஒரு பேருந்து ஓட்டுனருக்கும் உங்களுக்கு மற்றவர் உங்களை தூற்றுகிறார் என்ற எண்ணம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் உங்களுக்கு என்னுடைய சாரி அப்புறம் நன்றி.



Friday, March 26, 2010

காதல் காதல்

நான் இப்படி ஒன்றை எழுதுவேன் என்று நினைத்துகூட பார்த்ததில்லை. நான் சின்ன பையங்க எனக்கு ஒன்னு தெரியாது


எனக்கு இதில் எப்பொழுதும் ஆர்வம் அவ்வளவாக இருந்ததில்லை. என் பள்ளி நாட்களிலிலும் சரி, இப்போது முடிந்த என் இளங்கலை கல்வி கல்லூரி நாட்களிலிலும் சரி நான் எந்த பெண் அவ்வளவாக மயங்கியதாக எனக்கு ஞாபகம் இல்லை.
ஆனால் சிலரிடம் CRUSH இருந்திருக்கிறது...
அதனை இதோடு நான் குழப்பிக்கொள்ளவில்லை ...
குழம்பியிருந்தால் நான் காதல் வயப்பட்டுருப்பேனோ என்னவோ..?
நான் பலரிடம் நன்றாக பழகுவேன்.

அந்த பெண்களும் அப்படித்தான். அவர்களும் குழம்பவில்லை.

ஆனால் எனக்கு ஈடுபாடு இல்லை...ஏன் என்றால் தெரியவில்லை...
யார் கண்டார் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் ?

இவ்வாறு போக...
என் நண்பர்கள் பலர் ஏன் எல்லாரும் என்று கூட சொல்லலாம் யாரையோ காதலித்துக் கொண்டிருந்தனர். நான் அவர்களை நன்றாக கேளி செய்வேன். இந்த காதல் செய்றவர்களை கேளி செய்வதே தனி சுகம்.
இவர்களில் பெரும்பாலானோர் ஒரு தலை ராகங்கள் தான்.
 3 மாதம், 10 மாதம், 2 வருடம், 3 வருடம் ஏன் 7 வருடம் கூட ஒரு தலை ராகம் பாடியவர் உண்டு.அவர்கள் தனியாக சிக்கினாலும் சரி, கூட்டமாக சிக்கினாலும் சரி ஓட்டி எடுத்துவிடுவோம்.

இன்னொரு கூட்டம் என்ன வகை என்றாலும் காதலை சொல்லிவிடுவார்கள்.
ஆனால், அந்த பெண் வேறு ஒருவரை காதலிப்பாள். இவர்கள் கண்களில் கண்ணீர்.
சில சமயம் அந்த பெண்ணை தூற்றும் ஆண்களை பார்த்திருக்கிறேன், அவள் நன்றாக வாழ எண்ணியவரை பார்த்திருக்கிறேன்,பெருமைப்பட்டு, ஆச்சரியப்பட்டும் இருக்கிறேன். "இன்னும் உங்கள மாதிரி ஆள் இருக்காங்களான்னு"

மாமா பொண்ணு, அத்தை பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு காதல். எப்பா! இவனுங்க காதல்ல எங்கெங்கிருந்தோ வில்லன் வர்றான் அப்படிம்பாங்க.
 அசல்ல ஒரு மாப்ளன்னோன இங்க இவருக்கு புளிய கரைக்கும். வேற வழியில ஒரு சொந்தக்காரன் மாப்ளன்னு வந்து நின்னுருவான்னு பயம் . கதைல டூவிஸ்ட் இருந்திகிட்டே இருக்கும்.

அடுத்த கூட்டம் இரு பாலரும் மாங்கு மாங்குன்னு என்று காதலிப்பார்கள். திடீர் என்று ஒரு பிரேக் அப். காரணமே இருக்காது. அப்புறம் புலம்பல். அன்பு ஏங்குறது.

அப்புறம் உள்ளவங்க, ஹார்மோன் கடலன பொங்க, அந்த தீ அணைக்க காதல் என்னும் பெயர் வைத்துக் கொள்ளும் புத்திசாலிகள். என்னை கேட்டால் இவர்கள் களவும் பாலருடனே வாழ்ந்து வந்தாலே போதும் திருமணம் என்று தேவையே இல்லை. நான் பல சமயம் இவர்கள் செய்வதுதான் உண்மையான
ககாடததலலலோ என்று "வியந்திருகிறேன்"
ஆதி மனிதன் இனவிருத்திக்காகத்தானே துணை தேடினான்.
 அப்ப எதுக்காக ஒருத்தி கூட மட்டும் வார்த்தை சேர்த்தன்னு கேட்டிங்கன்னா , பாலியல் நோய் பரவாது, குழந்தை மனவளர்ச்சி நல்ல முறையில் இருக்கும் தாயிம் தந்தையிம் சேர்ந்திருந்தால்.

இப்படி நிறைய வகையா சொல்லலாம் காதல்ல.
ஆனால் நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது எங்கள் கல்லூரி போரட்டத்த சந்திச்சப்ப நாங்க மரத்தடியில வகுப்பு முடிந்து இன்டெர்வல் அப்ப சுதந்திரமாக யோசிக்கும் போது, என் நண்பர்கள் கிட்ட சொன்னேன் " லவ் பண்ணி மேரஜ் பண்ணா ஜாதி கொடுமை, ஏற்றத் தாழ்வு, ஜாதிகளுக்கான so-called-identity காணாமல் போக வாய்ப்பிருக்கில்ல ?" அப்படின்னு கேட்டிக்கிட்டோம். அப்ப அதான் டாப்பிக்.

ஆமான்ற ஒரு முடிவுக்கு வந்தோம்.  நானே எதிர்பாக்கல எங்கிட்ட இருந்து அப்படி ஒரு முடிவ. லவ் பண்றவங்கள சந்தோஷமாக பார்க்க ஆரம்பித்தேன்...

சில நாட்கள் கழித்து என்னை சுற்றிய காதல் ஜோடிகள் அனைத்தும் ஒரே வகுப்பை சேர்ந்தவர்கள் என்று அறிந்தேன்.
 அதன்பின் தான் அறிந்தேன் ஓரே வகுப்பை சேர்ந்த மக்களாய் இருப்பதால்தான் அவர்கள் காதலர்கள் என்று தங்களுக்குள்ளேயே அடையாளம் காணப்படுகிறார்கள் என்று.
" ஏன் ?" கேட்டால் ஓரே பதில் " Easily Attainable and Accessible  ".
 நாம் அடைந்து விடுவோம் என்ற ஒரே காரணத்தினால் காதலிக்கிறீர்கள் என்றால் ? இப்படி ஒரு காதல் தேவை தானா ?
 இப்படி காதலித்து ஜாதி காப்பாற்றி கொள்ளும் இன்னும் பழமை வாதியாக வாழும் காதலர்களின் காதல் தலைகுனியட்டும்.

ஆனால் என்னுடன் பயின்ற,வாழ்ந்த, வாழப்போகும் நண்பர்களுக்கு நீங்கள் காதலிக்கும் பெண் தற்செயலாக வகுப்பு இருந்து உங்களுக்கு எந்த எதிர்ப்பு வராத பட்சத்தில் உங்களுக்கு வாழ்த்துகள்.

ஜாதி , மததிற்காக, உங்கள் காதலை என்றும் விட்டு கொடுக்க வேண்டாம்.
Never Compromise Love for " Something that means only in paper"

Wednesday, March 24, 2010

மனச்சூழல் மாசுபாடு

 நான் எனது இளங்கலை இறுதியாண்டு படித்து கொண்டிருந்தேன். நான் உயிரியல் மாணவன் என்பதால்
எனக்கு உயிரியல் தொடர்பான எந்த பிராஜக்ட் கிடைத்தாலும் அதை செய்ய முனைப்பாக இருந்த காலம்
அது.

அந்த சமயம் C.P.Ramasamy Ayyar Educational trust என்னும் Non-Profit Non-Governmental  Organization ஒரு அமைப்பு
சுற்றுசூழல் மாசுபாடு குறித்து ஆய்வறிக்கை செய்ய எங்கள் கல்லூரியில் பயிலும் உள்ள இதில் ஆர்வம் உள்ளவர்களை தொடர்பு
கொள்ள சொன்னார்கள்.
 நானும் என் வகுப்பு மாணவர்களும் நாங்கள் விலங்கியலுடன் கூடிய உயிர் தொழிநுட்பவியல் மாணவர்கள் , உயிர்வேதியல் மாணவர்களும் சிலரும் அந்த சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த ஆய்வை செய்வதில் உதவ தலைபட்டோம்.

எங்களது வேலை நமது வளி மண்டலத்தில் எவ்வளவு தூசு , Sulphur-Di-Oxide ( So2 ) , Nitrogen-Di-Oxide (No2) இருக்கிறது என்பதை கண்டறிய High Volume Sampler  என்ற கருவியை பயன்படுத்தினோம்.
இது போக ஒரு நாளில் எத்தனை இரு சக்கர, நாலு சக்கர வாகனங்கள் செல்கின்றன என்றும் கணக்கு எடுத்து கொண்டு இருந்தோம்.

இந்த ஆய்வு மதுரையில் மூன்று இடங்களில் செய்தோம். இது பெரும்பாலும் ஜனநடமாட்டம், வாகனங்கள் அதிகமாக செல்லும் இடங்களில் செய்யலாம் என்று தேர்ந்தெடுத்தோம்.
முத்லில் பெரியார் நிலையம் எதிரே உள்ள தீயணைப்பு நிலையம் அருகே அமர்ந்து முதல் நாள் வேலை நடத்தினோம்.

இரண்டாம் நாள் யானைக்கல். சிம்மக்கல்லில் உள்ள இடம் அங்கே காய்கறிகள், பழங்கள் விற்பார்கள்.

மூன்றாம் நாள் கோரிப்பாளையம்.
அந்த High Volume Sampler என்ற கருவியை இயக்க மின்சாரம் தேவைப்பட்டது . முதல் இரண்டு நாட்களும் எந்த பிரச்சனையும் இன்றி எங்களுக்கு மின்சாரம் கிடைத்தது.

மூன்றாம் நாள் கோரிப்பாளையத்தில் ஆய்வு செய்ய எங்கள் கல்லூரிக்கு வெளியே உள்ள கடைகளில் ஏதாவது ஒரு கடையில் மின்சாரம் வாங்கிக் கொள்ளலாம் என்று அனுமதி கேட்க இரண்டாம் வேலை முடிந்தவுடன் சென்றோம்.

ஆனால் ஒரு கடையில் கூட எங்களுக்கு மின்சாரம் கிடைத்தபாடில்லை.இத்தனைக்கும் அந்த மின்சாரத்திற்கு ஆகும் பணத்தை தருவதாக அமைப்பை சார்ந்தவர் தருவதாக சொன்னார்.

நீங்கள் கேட்கலாம் சட்டபடி மின்சாரத்தை வெளியே விற்பது தவறில்லையா என்று ? இது ஒரு அரசு சார்ந்த, அரசுக்காக செய்யப்படும் ஆய்வறிக்கை என்பதால் இதில் எந்த சிக்கலும் இல்லை என்று எங்களுடன் வந்த அந்த அமைப்பு சார்ந்தவர் சொன்னார்.

நாங்கள் இந்த விவரங்களை விளக்கி சொல்லியும் யாரும் எங்களுக்கு செவி சாய்க்கவில்லை.  
நான் என் நண்பர்களும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினோம். பலனில்லை.

பின் நாங்கள் ஒரு சிறிய கடை சொல்ல போனால் அந்த வரிசையிலே அது தான் சின்ன கடை எனலாம். அதில் அம்மா இருந்தார்கள்.
எல்லா விவரங்களையும் விளக்கி சொன்னேன். எதுவரையில் என்றாலும் இந்த ஆய்வறிக்கையால் நமக்கு ஏதோ வகையில் நல்லது நடக்கும் என்று. வேறு சட்டப்படி இது தவறில்லை, இது அரசுக்காக செய்யப்படும் ஆய்வறிக்கை என்றெல்லாம் நான் சொல்லவே இல்லை.

நாங்கள் மற்றவர்களை சட்டத்துக்கு புறம்பாக ஏதும் செய்ய சொல்லவில்லையே. எல்லாம் தெளிவாக விலக்கிய பின்னும் இந்த நிலைப்பாடு வருத்ததிற்குரியது.
 "எதுக்குப்பா வம்பு " என்ற போக்கு நம்மை சுற்றியிருக்கும் சமூகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடுமோ என்ற அச்சம் தொனிக்கிறது.
 நாம் தனித்தீவுகளாக வாழ ஆரம்பித்துவிட்டோம்.

 நாம் நம்மை போல் பிறரையும், பிறரின் நலனையும் சற்று சிந்திக்க வேண்டும்.
Sustainable Development என்று சொல்வார்களே அதற்கேற்றார்போல் வாழ வேண்டும்
மனிதர் மனச்சூழல் மாசுபட்டுக்கொண்டுதான் இருக்கிறது இல்லை இல்லை மாசுபட்டுவிட்டது.
இந்த மனிதர் மனச்சூழல் மாசுபாட்டை சரி செய்தால் சுற்றுசூழல் மாசுபாடு என்ன சமூகத்தில் நிலவும் பிரச்சனையும் தீர்த்துவிடலாம்.
இந்த இடுகையில் எந்த சந்தேகமின்றி எங்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்த அந்த அம்மாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
அந்த மூன்று நாட்களிலும் எங்களுக்கு மின்சாரம் கொடுத்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

Monday, March 22, 2010

மறக்க முடியாத 21

மனிதன் யோசிக்க தெரிந்த, சிரிக்க தெரிந்த மிருகம் என்று பலர் சொல்ல கேள்வி பட்டிருக்கிறேன்.
இந்த வாக்கியம் எவ்வளவு உண்மைமிக்கது ?
ஆனால் மனிதரில் சிலர் தங்களது தனித்தன்மை அறியாது அஃதாவது தான் யார் என்றே தெரியாமல் இருக்கிறார்கள்.

இவர்களை பெரும்பாலும் நம்மில் பலர் ஓரே வார்த்தையில் இவர்களை "பைத்தியம்" என்ற வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள் இவர்களது பிரச்சனை என்னவென்று தெரியாமல்.

22 மார்ச் 2010 அன்று பொதிகை தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. பலர் பார்த்திருக்ககூடும்.அந்த நிகழ்ச்சி Down's Syndrome என்ற குறைபாடுள்ள குழந்தைகள் பற்றிய நிகழ்ச்சி.

Down's Syndrome இருக்கும் நபர்களிடம் மனிதனின் மரபணுவில் 23 குரோமோசோம் ஜோடிகளில் 21 ஆம் ஜோடியில் மட்டும் ஜோடி குரோமோசோம் பதிலாக மூன்று குரோமோசோம்கள் இருக்கும் (Trisomy என்பார்கள் ).
 மார்ச் 21 உலக டௌன் சிண்ட்றோம் நாள் ஆகும்.
பெயர் காரணம் பிரிட்டிஷ் மருத்துவர் John Langdon Haydon Down என்பதில் இருந்து வந்தது

ஒவ்வொரு 800 குழந்தைகளுக்கும் ஒரு Down's Syndrome ஆல் பாதிக்கப்பட்ட குழந்தை பிறக்கிறது என்பது புள்ளிவிவரம்.
ஒரு குழந்தை தன் தாயின் கருவறையில் இருக்கும் போதே அதுவும் 11 முதல் 13 வாரங்களுக்குள் நாம் பரிசோதித்து பார்க்கலாம் பிறக்க போகும் அந்த குழந்தை Down's Syndrome ஆல் பாதிக்கப்பட்டதா என்று கூறுகிறார்கள்.
எதற்கு ?
இந்த உயிரை கருவிலே அழிக்கவா ?

இவர்களை மருத்துவம் செய்வதால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை என்று சாரார் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களின் பண்புகள் என்றால்



எதையும் புரிந்துகொள்ளும் திறன் (Cognitive Ability) குறைவாக காணப்படும்

வாலிப பருவத்தில் உள்ளோர் தீவிர மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.

இந்த குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பெரும்பாலும் பார்வையில் குறைபாடு இருக்கவே செய்கிறது.

வாய், காது, தலை,கழுத்து இவர்களுக்கு சிறிதாக இருக்கும்.

 நாக்கு வாயுடன் உள்ளே ஒட்டி இருக்கும்.

கண் பெரிதாக இருக்கும்.
மற்றவர்களை விட இவர்கள் வெகுவாக வித்தியாசப்படுவது இவர்களுக்கு இருக்கும் குறைந்த Reflex Action & Poor Muscle Tone.

இன்னும் இவர்களுக்கு பல மருத்துவ பக்கவிளைவுகள் இருக்கவே செய்கிறது.அதனை Treatment செய்துவிடலாம் என்கிறார்கள்.

இவர்களுகென்று மாத்ரூ மந்திர் என்று அமைப்பு சென்னையில் இருக்கிறது. இந்த அமைப்பு Down's Syndrome ஆல் பாதிக்கப்பட்டோருக்கு என்று சிறப்பு பயிற்சி நடத்தி வருகிறது.

கடந்த 10 வருடங்களில் 4000 குழந்தைகளை இவர்கள் இயல்பு வாழ்க்கை நிலைக்கு கொண்டு சென்றிருப்பதாக சொல்கிறார்,  இந்த அமைப்பின் தலைவர் Dr.லேகா ராமச்சந்திரன்.
இவர்கள் இசைக்கருவிகள் இசைக்கிறார்கள், நீச்சலடிக்கிறார்கள், கடுமையாக உழைக்கிறார்கள்.
பரத நாட்டியம் ஆடுகிறார்கள்.

இந்த குழ்ந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனை என்னவென்றால் இவர்களுக்கு சிறப்பு பள்ளிகள் அல்லாத மற்ற பள்ளிகள் இவர்கள் என்னதான் தகுதியுடைவர் என்று நிருபித்தாலும் இடம் கொடுக்க பள்ளி நிர்வாகம் மறுக்கிறது.
இந்த குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தால் மற்ற குழந்தைகளுக்கு (Feeling of Apathy) தன்னை போல் பிறரை நினைக்கும் பண்பு வ(ள)ரும், என்பது என் கருத்து.

Dr.லேகா ராமச்சந்திரன் இந்த குழந்தைகள் எதையும் புரிந்துகொள்ள நேரம் எடுத்துக் கொண்டாலும், இவர்களால் முடியாதது என்று எதுவும் இல்லை.
இவர்கள் போதிய பயிற்சி பெற்ற பின் கூட மற்ற பள்ளிகள் சேர்க்காதது, அந்த பள்ளிகளுக்கு தான் நஷ்டமே என்றார், காரணம் இந்த குழந்தைகளின் மூலம் மற்ற குழந்தைகளுக்கு ஒரு நம்பிக்கை, அன்பு பெருகும் என்றார்.

நம்ம ஊர்ல தான் " +2 Results " போயிடும் மதிப்பெண் குறைவாக வாங்குகிற மாணவரை அந்த வருடம் அந்த மாணவரெல்லாம் பரீட்சை எழுத விடாம பள்ளிகள் தடுக்கிறது. ஓரே வகுப்புல ஒன்னா படிச்சவனுக்கே இந்த நிலைமைன்னா இந்த சிறார்க்கு யார் இடம் கொடுப்பா ?

இந்த பள்ளிகளிடம் இருந்து வரும் பதில் " They should go for Special school,This is a Competition world. 
This world has become a Race, they can't cope up with that ".

ஆனால் மாத்ரூ மந்திர்க்கு நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன், ஏனென்றால் அவர்களை வாழ்த்த வயதில்லை.

இந்த டௌன் சின்றோம் குழந்தைகளை ஆக்கப் பூர்வமாக உருக்குவாக்குவோர் கையில் சேர்த்தால் அவர்கள் வாழ்க்கை சிறக்கும்
ஏனென்றால்
சுற்றியிருக்கும் குதிரைகள் இடித்து தள்ளிவிட்டு ஓடி விடும்.
ஏன் கேட்டா " Life is a Race" ன்னு நம்ம கிட்டயே தத்துவம் பேசுவானுங்க.
வாழ்க்கை ரசிக்க தெரியாதவனுங்க.

இந்த பள்ளிகள் நாளைய உலகுக்கான மனிதர்களை வளர்கிறதா அல்ல ஓடி பிழைக்க குதிரைகளை தயார் செய்கிறதா ?

Wednesday, March 17, 2010

நான் படிக்காத பள்ளிகூடம்

நான் வெளியே ஊர் சுற்றிப் பார்க்கும் இயல்புடையவன் அல்ல. இருந்தும் அன்று நான் என் வேலை நிமித்தமாக ஊரின் புறநகருக்கு செல்ல வேண்டியிருந்தது. எனது ஊரின் புற நகரில் இருக்கும் பெண்கள்
மேல்நிலைப்பள்ளியில் எனக்கு ஒரு சின்ன வேலை இருந்தது.
 நானும் என்னுடன் வேலைப் பார்ப்பவரும் சென்றோம்.

 அது ஒரு கிராமத்து பள்ளிக்கூடம் என்றறிந்தேன்.

நான் அதுவரை நான் அப்படியொரு பெண்கள் பள்ளிக்கூடம் கண்டதில்லை, சொல்லப் போனால் அப்படி ஒரு பள்ளிக்கூடத்தை பார்த்ததேயில்லை.

பள்ளிக்கு பின் ஒரு கால்வாய், ஒரு பாதுகாப்பு கிடையாது. பள்ளிக்கட்டடத்திற்கு நடுவே ஒரு பாலடைந்த, பாதி இடிந்த ஒரு கட்டிடம் இருந்தது. அந்த இடிந்த கட்டிடத்தில் உடைந்த கருங்கற்கள், செங்கல்கள், சறிந்து விழும் நிலையில் இருந்தது.

எந்த நிலையிலும் யார் தலையில் வேண்டுமானாலும் விழ நேரலாம்.
சுத்தம் என்று எங்குமே பார்க்க முடியவில்லை.

பள்ளியின் படிக்கட்டுகளில் ஒரு நாய் தூங்கிக்கொண்டிருந்தது. அந்த ஆண் நாய் சொறி பிடித்திருக்ககூடும் என்று தெரிந்தது பார்த்தவுடன்.

அந்த நாய் யாரையும் கடித்தால் Rabbies நோய் தாக்க கூட வாய்ப்பிருக்கிறது. யாரும் அந்த நாயை விரட்ட மாட்டார்களா என்று எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன்.

பள்ளிக்குள்ளே தின்பண்டங்களுக்கான ஒரு அங்காடி இருந்தது.பொருட்கள் யாவும் சுத்தமின்றி ஈ மொய்த்துக் கொண்டு இருந்தது.

அப்புறம் ஆசிரியைய பார்க்க போனேன். அவங்க மதிய உணவு உண்டுவிட்டு வெற்றிலை பாக்கு போட்டு கொண்டுருந்தார். அங்கிருந்த எல்லா ஆசிரியயையும் சொல்ல மாட்டேன், ரொம்ப சிலரை தவிர பலர்
மெனக்கெடுவடதும்,அற்பணிப்பும் இல்லை. சிலரில் ஒருவர் மென்பொருள் தொடர்பாக என்னிடம் சந்தேகம் கேட்டார்.

அந்த பள்ளியில் இணையதள வசதி இருந்ததால் ஒரு சின்ன open source
மென்பொருளை தறவிறக்கி நிறுவினேன்.

 

அந்த ஆசிரியையின் அந்த updation சிறிது மகிழ்ச்சி தந்தது. வரும்போது நான் வசிக்கும் இடத்தில் வசிக்கும் ஒருவரை பார்த்தேன். அவரது மகனை ஒரு பெரிய தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்.
" ஏன் தான் பணி செய்யும் அரசு பள்ளி போல் ஆண்கள் பயில்வதற்கான் அரசு பள்ளியில் ஏன் படிக்கவைக்கவில்லை ? " பதில் யோசித்தேன் எனது இந்த இடுகையை மீண்டும் படித்தேன்....
பதில் கிடைத்தது...
கேள்வியிலே பதிலும் ...பதிலிலேயே கேள்வியும் இருப்பது
 ஒன்றும் விந்தையில்லையே

என்னையும் இம்மாதிரி பள்ளிகளில் என் தந்தை சேர்க்காததன் காரணம் புரிந்தது இந்த பள்ளிகளில் உள்கட்டமைப்பும், எல்லா ஆசிரியர்களிடமும் மெனக்கெடுதல் சரிவர இருப்பதில்லை என்றே கூற வேண்டும்.

ஆனால் இந்த இந்த மெட்ரிக் பள்ளிகளில் மட்டும் மேலே சொன்ன எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் " இல்லை " என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பெரும்பாலும் வருமான ரீதியாக பின் தங்கியவர்களாகவும், காப்பகத்தில் வள்ர்க்கப்படுபவர்களாகவும் தான் இருக்கிறார்கள்.

இவர்கள் இந்த பள்ளிகளில் கூட படிக்க மறுத்துவிட்டால் இவர்களை இவர்களது பெற்றோர்கள் வேலைக்கு அனுப்பி விடுவார்கள்.

+2 வகுப்பு முடிந்தவுடன் பெரும்பாலும் இந்த பெண்களுக்கு திருமணம் பெரும்பாலும் தன் உறவினனுடன் நடந்துவிடுகிறது.
வெகு சிலரே இந்த கிராமங்களில் இருந்து வெளியே வந்து சுதந்திரமாக உயர்கல்வியோடு பறக்கிறார்கள். பலரது சிறகுகள் தங்களது வீடுகளுக்குள்ளேயே ஓடிக்கப்படுகிறது.

பள்ளிகளில் உள்கட்டமைப்பும், ஆசிரியரின் மெத்தனப்போக்கும் இல்லாமல், பள்ளிகளில் பெண்களுக்கு அடுத்து தாங்கள் அடுத்து என்ன படிக்கலாம், படிப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் ஆசிரியர் சொல்லி ஊக்கப்படுத்த வேண்டும்.
அந்த நிலைமை இயல்பு நிலையில் வந்திருந்தால் என்னை போன்றோர் மெட்ரிக் பள்ளிகளில் படித்திருக்க மாட்டோம்.இனி வந்தால் எங்கள் தலைமுறை இந்த பள்ளிகளிலேயே படிக்கும்.

வருமா அந்த நாள் ?

Sunday, March 14, 2010

பெண்ணே மன்னித்து நிற்க... சச்சினுக்கு நன்றி...

இந்த இடுகை சச்சின் டெண்டுல்கர் தனது 200* ரன்கள் ஒரு நாள் போட்டியில் எடுத்த போதன்றே

வெளியிட விரும்பினேன். ஏனோ சில காரணங்களால் தள்ளி போய் கொண்டே போனது.

மார்ச் 8 அன்று வெளியிட தலைப்பட்ட போது அன்று பல வலைத்தளங்களில் மகளிர்கான பல

இடுகைகள். பத்தோடு பதினொன்றாக என் இடுகை இருக்க விருப்பமில்லை என்று சொல்லவில்லை.

அந்த இடுகைகளை படிக்கவே எனக்கு நேரம் சரியாக இருந்தது.இந்த இடுகை தள்ளிப் போனது.

மகளிர் தினம் முன்னிட்டு எத்தனையோ இடுகைகள் மகளிர் மசோதா பற்றி, பெண் கல்வி, பெண்ணுரிமை,

'எனக்கு பிடித்த 10 பெண்கள்' என்று எத்தனையோ இடுகைகள். ஒவ்வொன்றும் அவ்வள்வு கருத்தூன்றச்

செய்யக் கூடியவை.

இந்த இடுகைக்கும் சச்சினுக்கும் என்ன சம்பந்தம் என்றால் சச்சின் தொட்ட அந்த 200* என்ற அந்த

சாதனை செய்த அன்று ரவி சாஸ்திரி ஒரு comment கொடுத்தார். இந்த கிரஹத்தில் 200* ஒரு நாள்

போட்டியில் 200 ரன் தொட்ட ஒரே வீரர் இவர் தான் என்றார். எனக்கு பொறி தட்டியது. உடனே அவரது

பெயரை Wikipedia தட்டி Go என்ற Button-ஐ சொடுக்கினேன்.

சச்சினின் சாதனகள் இருந்தது. அதற்கு கீழே Belinda Clark என்ற பெண்ணை பற்றி ஒரே வரி இருந்தது.

சச்சின் இப்பொழுது தொடும் சாதனையை பெலிண்டா கிளார்க் என்ற பெண் 1997 ல் 229 ரன் எடுத்தார்.

பெண்கள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடிய அவர் 229 ரன்களை 1997 ல் Denmark அணிக்கு

எதிராக மும்பையில் எடுத்தார்.

அந்த வருடம் பெண்கள் உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

பெண்கள் உலகக் கோப்பை 1973 ஆம் ஆண்டிலிருந்தே நடத்தப்பட்டு வருகிறது.

ரவி சாஸ்திரி சொன்னது ஒரு வகையில் தவறு. இந்த கிரஹத்தில் 200 ரன்கள்

முதலில் எடுத்தவர் இந்த பெண் என்று எண்ணும்

ஆச்சரியமும் பெருமையும் உண்டு எனக்குள்.

வருத்ததிற்குரிய விடயம் என்னவென்றால் இவரை பற்றி பலருக்கு

தெரியாமல் போனதுதான்.

இந்த பெண்களின் திறமையினையும் தீறத்தையும் நாம் இவரை பற்றி

தெரியாதவருக்கு சொல்வதற்கே இந்த வகையான இடுகைகள்.

ஆனால் சச்சின் 200* ரன் எடுக்காமல் இருந்திருந்தால் நான் இவரை பற்றி

தெரியாமலே போயிருப்பேன்.

ஒருவர் சாதனை செய்தால் இந்த உலகம் உற்றுப் பார்க்கும் என்பார்கள்.

ஆனால் பெண்கள் செய்யும் சாதனைகள் கூட இன்னொருவரின்

 சாதனையோடு ஓப்பிட்டு பாராட்டினால் அது எப்படி தகும் ?

" ஒரு ஆண் சாதனை செய்த பின் தான் பெண்களின் செயல்களோடு அதனை

ஓப்பிட்டபின் தான் பெரிதாக பேசுவீர்களா ? " என்று பெண்ணியம் கேட்டால்

நமது பதில் " மன்னிப்பு " மட்டும் தான் என்று சொல்லி தப்பிப்பது எந்த

வகையிலும் நியாயம் இல்லை.

Friday, March 5, 2010

ஆறிலிருந்து அறுபது வரை

என்னடா பழைய ரஜினி படத்தோட விமர்சனம் ? ன்னு கேட்கிறிங்களா ?
இல்லங்க ....

நான் ஒரு இடத்தில பகுதி நேர ஊழியராக இல்ல இல்ல ஆசிரியராக வேலை பார்க்கிறேன்.
அங்கே பல தரப்பட்ட மக்கள் வந்து கணிப்பொறி கத்துக்குவாங்க.
என்னிடம் எட்டு வயது சிறுமி கணிப்பொறி கற்றுக் கொள்ள வந்தாள்.
அவள் எப்பவும் துறு துறுன்னு இருப்பாள். Lab ல சில பேர் அந்த பெண் சுறு சுறுப்பாக
இருப்பதனை ரசிப்பார்கள். அவளுடைய அந்த Hyperactive behaviour, High Energy level (தமிழில்
வார்த்தை தெரியல) அவளுக்கு ஒரு வண்ணத்தை கொடுத்தது.

என்ன சில நேரம் " Bullet மணி "ன்னு கூப்பிட்டு கிண்டல் பண்ணுவாள். எப்பவும் எங்கிட்ட " Uncle
உங்க வயசு எத்தன ? என்ன படிச்சிருக்கீங்க ?" ன்னு கேப்பா. எனக்கு எட்டு வயசு ஆகுது அப்படி
சொன்னேன். உடனே பேர் சொல்லி கூப்பிட ஆரம்பிச்சுட்டாள்.

இப்படி அவளுக்கு நான் தான் class எடுக்கணும் என்பாள் , அப்புறம் நான் தான் எடுப்பேன். ஆனா
ஏனோ தெரியலை சில பேருக்கு அவளோட அந்த குணம் எரிச்சலை உண்டு பன்னியது.
சில நேரம் இந்த பொன்னுக்கு இந்த வயதிலே எதுக்கு computer சிலருக்கு தொண்றியது.

ஆனால் அவளுடைய அந்த குணம் பிடித்ததினால் மட்டுமல்ல, நான் நினைத்தது என்னவென்றால்
கல்வி கற்பதற்கு மனம் இருந்தால் போதும். வயது விடயமே இல்ல.நான் அவளுக்குரிய எல்லாமும்
சொல்லிக் கொடுத்துவிட்டேன்.ஆனால் பிறருக்கு ஏன் தொண்றவில்லை அவளுடைய வயது தான் அவளுடைய நடவடிக்கைகளுக்கு காரணம் என்று. இந்த மனப்பக்குவத்தை அவர்களுக்கு ஏன் கல்வி கொடுக்கவில்லை

பிறகு சில நாள் கழித்து., இன்னொருத்தவங்க வந்தாங்க. அவங்களுக்கு வயது ஒரு ஐம்பத்தி நான்கு.இவங்கள் எப்பவும் என்னிடம் கேள்வி கேட்டுகொண்டே இருப்பாங்க. அதனால மத்தவங்கள சரிவர கவனிக்க முடியாமல் போனது. ஆனால் இவங்களுக்கு இந்த வயசுல எதுக்கு computer ன்னு எங்கிட்ட பல பேர் கேட்டாங்க.

இவங்க என்ன படிச்சிட்டு வேலைக்கா போகப் போறாங்க, நிச்சயமா இல்ல அப்ப எதுக்கு இந்த
வயசுல இதெல்லாம்ன்னு என் காது பட பேசினார்கள்.
அவங்களுக்கு பாடம் எடுத்தது நான் ஆனா கூட இருக்கிறவங்க ரொம்ப சலிச்சுகிட்டாங்க. ஆனா நான்
அவங்ககிட்ட பார்த்தது கடலளவு ஆர்வம். இந்தளவு ஆர்வம் எனக்கு பள்ளியில படிக்கும் போது கூட
இருந்ததில்லை.அந்த ஆர்வத்த பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்.

இந்த சமூகம் எந்த ஒரு விஷயத்திலும் பிரதி பலன் எதிர்பார்கிறது. பலன் பாராமல் செயல்
செய்வோரை இந்த சமூகம் என்றும் அங்கீகரிப்பதுமில்லை அதே சமயம் அவர்களை கேலியாகவும்
பார்க்கிறது.நான் படிச்ச school- ல ஒரு motto உண்டு. அறியாமை என்னும் இருளை போக்கும்
விளக்கே கல்வி என்பார்கள்.

அதே பள்ளியில் " நீ நல்லா படி , அப்படி படிச்சா உனக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும்.
அதனால் நல்ல வேலை கிடைக்கும் ", இப்படி அடுக்கிக் கொண்டே போவார்கள். வேலைக்கு சென்ற
பின்னும் அறியாமை என்னும் இருள் இருக்கத்தான் செய்கிறது அவர்களிடத்தே.

8 வயது சிறுமியும் சரி, 54 வயது கொண்ட பெண்ணும் தங்களது வேலை சரியாகச் செய்கிறார்கள்.
ஏன் வயதை குறிப்பிட்டேன் என்றால் இதை வைத்துதான் இவர்களை generalise செய்கிறார்கள். கல்வி கற்பதற்கு என்று அனுமதிக்கப்பட்டதாக இவர்கள் என்னும் அந்த இளைஞர்,
இளைஞிகள் தங்களின் அறிவின் முதிர்ச்சிக்காகவா கல்வி கற்கிறார்களா ?

அந்த கல்வி என்னதான் மாற்றம் ஏற்படுத்துகிறது நம்மிடையே ?

கல்வி முறைகளில் பிழையா ?

அல்ல வேலைக்கு தேவைப்படும் கல்வி மட்டும் போதும் என்ற எண்ணத்தினால் வந்த தவறா ?

இந்த கேள்விகளுக்கு பதில் இல்லை என்றால் பரவாயில்லை ஒரு நாள் இந்த கேள்விகளின் பதில்

போல் இந்த கேள்விகளும் இல்லாமலே போக வேண்டும்.

இதற்கு தீர்வு என்று சொல்லுதல் முறையல்ல. அடுத்தது செயல் தான் தேவை. என் அந்த

செயல்களில் ஒரு முயற்சி தான் இந்த பதிவு. இங்கே ஒரு திசை கிடைக்கும் என்று நம்புகிறேன்.